
கன்னியாகுமரி மாவட்டத்தில் தன் மூன்றரை வயது மகனுடன், கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது மகனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்டம், மாமூட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மெல்பின்(37). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சசிகலாவும் (32) சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்றவரை வயது மகன் இருந்தார்.
மெல்பின் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் காப்புக்காடு பகுதியில் ஒரு இடத்தில் சசிகலா ஜாதகம்(பிரசன்னம்) பார்க்கச் சென்றார். தன் தாயுடன் சென்ற அவர், அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு தன் மூன்றரை வயது மகனுடன் ஆட்டோ பிடித்து மண்டைக்காடு பகுதிக்கு வந்தார்.
வழியில் ஒரு சாப்பாட்டு பொட்டலம் வாங்கியவர், வெட்டுமடை என்ற கடலோரப் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டு இருக்கும் போது, அந்த கடற்கரையில் நானும், மகனும் சாப்பிட்டு விட்டு கை கழுவி விட்டு வருகிறோம் எனச் சொல்லிச் சென்றார். ஆட்டோ ஓட்டுநர் மாற்றுத்திறனாளி என்பதால் இவர்களைக் கரைப்பகுதியில் இறக்கிவிட்டுக் காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் சசிகலா திரும்பி வரவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர், அந்த வழியாகச் சென்ற ஒரு வாலிபரிடம் விஷயத்தைச் சொன்னார். அவர் போய் பார்த்த போது, அங்கே சசிகலா சடலமாக மிதந்தார். அவரை அந்த வாலிபர் மீட்டுக் கரையில் சேர்த்தார். சிறுவனின் உடல் இதுவரை கிடைக்கவில்லை.
பிரசன்னம் பார்த்துவிட்டு வந்தவர் திடீர் தற்கொலை செய்து கொண்ட காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறுவனைத் தேடும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.