இரண்டு பேருடன் தகாத உறவு; பெண் நடத்திய திருவிளையாடல்: நெல்லை தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்

கொலை
கொலை

திருநெல்வேலி தொழிலதிபர் கொலையில் வட இந்தியக் கும்பல் பணம் கேட்டு மிரட்டி கொலை செய்ததாகச் சொல்லப்பட்ட நிலையில் இவ்வழக்கில் அதிரடி திருப்பமாக பெண் விவகாரத்தில் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

திருநெல்வேலி அபிஷேக்பட்டியைச் சேர்ந்தவர் ஜேக்கப் ஆனந்த்ராஜ்(63). பில்டிங் கான்டிராக்டர். இவர் வீடு கட்டி அதை நல்ல விலைக்கு விற்றுவந்தார். இவர் திருநெல்வேலி டவுண் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் தன் பேத்தியை அழைத்துவரக் காரில் சென்றார். ஆனால் அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து டவுண் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களாக ஜேக்கப் ஆனந்தராஜின் குடும்பத்திற்கு தொடர்ந்து அலைபேசி அழைப்பு வந்தது. அதில் இந்தியில் பேசினர். அவர்கள் ஜேக்கப் ஆனந்த்ராஜ் தங்கள் பிடியில் இருப்பதாகவும் பத்து லட்சம் ரூபாய் தந்தால் உடனே அவரை விடுவிப்பதாகவும் பேசினர் எனவும் அவரது குடும்பத்தினர் போலீஸில் தெரிவித்தனர். இந்நிலையில் பேட்டை எம்.ஜி.ஆர் நகர் குளக்கரையில் நேற்று காலையில் ஜேக்கப் ஆனந்த்ராஜ் சடலமாக மீட்கப்பட்டார். அவரை வட இந்தியக் கும்பல் பணம் பறிக்கும் நோக்கத்துடன் கடத்தி நோக்கம் நிறைவேறாததால் கொலை செய்ததா? என்னும் கோணத்தில் விசாரித்து வந்தநிலையில் இவ்வழக்கில் அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்தது. இவ்வழக்கில் இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “ஜேக்கப் ஆனந்த்ராஜை, பேட்டை நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த தேவி(32) என்பவரும், அவரது ஆண் நண்பர் சங்கரன்கோவில் பிரின்ஸ் ஜேக்கப்பும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. டவுண் பகுதியில் வீடு கட்டி விலைக்கு விற்கும் பணியில் இருந்தபோது ஜேக்கப் ஆனந்த்ராஜ்க்கு தேவியோடு பழக்கம் ஏற்பட்டது. தேவி ஏற்கெனவே கணவரைப் பிரிந்தவர். இந்நிலையில் தேவிக்கும், ஜேக்கப் ஆனந்த்ராஜிக்கும் இடையே முறைதவறிய பழக்கம் ஏற்பட்டது. இதே போல் தேவிக்கு சங்கரன்கோவில் பிரின்ஸ் ஜேக்கப்போடும் தவறான பழக்கம் இருந்தது. பிரின்ஸ் ஜேக்கப் பற்றிய விசயமே, ஜேக்கப் ஆனந்த்ராஜிக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார்.

இந்நிலையில் திடீரென தேவி வீட்டுக்கு ஜேக்கப் ஆனந்த்ராஜ் வந்தார். அப்போது தேவி வீட்டில் பிரின்ஸ் ஜேக்கப்பும் இருந்தார். இதில் ஜேக்கப் ஆனந்த்ராஜிற்கும், பிரின்ஸ் ஜேக்கப்பிற்கும் இடையே வாக்குவாதம் வந்தது. இதில் தேவி கைகளை பிடித்தார். பிரின்ஸ் ஜேக்கப் கழுத்தில் நைலான் கயிறுபோட்டு இறுக்கி ஜேக்கப் ஆனந்த்ராஜைக் கொன்றுள்ளார். உடலை குளக்கரையில் வீசி சென்றனர்” என வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in