`மகளுக்கும், மருமகனுக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை'- உயிரை மாய்த்துக்கொண்ட மருத்துவ தம்பதி

`மகளுக்கும், மருமகனுக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை'- உயிரை மாய்த்துக்கொண்ட மருத்துவ தம்பதி

நோய் கொடுமையால் தாங்கள் அவதிப்படுவதாகவும், மகளுக்கும், மருமகனுக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை எனவும் கடிதம் எழுதிவைத்துவிட்டு மருத்துவ தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தின் மலரம்பா பகுதியில் வீட்டுவசதிவாரியக் குடியிருப்பு உள்ளது. இங்கு ராம் மனோகர்(70) தன் மனைவி ஷோபா(68) என்பவருடன் வசித்து வந்தார். மருத்துவர்களான இவர்கள் இருவரும் சேர்ந்து திருச்சூர் பகுதியில் கிளினிக் நடத்தி வந்தனர். அண்மையில் இந்த கிளினிக்கை மூடிவிட்டு தம்பதி கோழிக்கோட்டில் உள்ள தங்களது இல்லத்தில் இருந்தனர். இவர்களை இவர்களது மகள் அவ்வப்போது வந்து பார்த்துவந்தார். இந்தநிலையில் இவர்களின் வீடு திறக்கப்படாமலேயே இருப்பதாக அவர்களது மகளுக்கு போன் செய்து பக்கத்து வீட்டுக்காரர்கள் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் அவர் அங்கு சென்று பார்த்தபோது வீட்டில் ஒரு அறையில் மருத்துவத் தம்பதி மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் தம்பதிகள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவர்கள் அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இருந்தனர்.

இந்தநிலையில் முதிய தம்பதிகளின் வீட்டில் இருந்து கடிதம் ஒன்றும் கிடைத்தது. அதில், “தங்கள் இருவருக்கும் வயோதிகத்தால் நோய் இருக்கின்றது. மகள், மருமகன் நன்றாகவே கவனித்துக் கொண்டாலும் அவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை” என உருக்கமாக கடிதம் எழுதி வைத்து இருந்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in