நள்ளிரவில் தோட்டத்து வீட்டிற்கு சென்ற திண்டுக்கல் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் விவகாரத்தில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகில் உள்ளது காசம்பட்டி. இங்குள்ள கணேசன் என்பவரது மகன் ஜோதி(27). விவசாயப் பணிகளைச் செய்துவந்தார். இவருக்கு இதே பகுதியில் தோட்டத்து வீடு ஒன்று உள்ளது. இரவு நேரங்களில் அவ்வப்போது இந்த வீட்டில் சென்று ஜோதி வசிப்பது வழக்கம். நேற்று நள்ளிரவு அந்த வீட்டில் போய் தூங்கச் சென்றார். ஆனால் காலையில் வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குப் போய் பார்த்தனர். அப்போது கழுத்தில் வெட்டுப்பட்டு ஜோதி இறந்துகிடந்தார்.
நத்தம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்ததன்பேரில் ஜோதியின் உடலைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கைரேகை நிபுணர்களும் வந்து சோதனை செய்தனர். மோப்பநாய் ஓராவும் வந்தது. ஆனால் அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. பெண் விவகாரத்தில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். தோட்டத்து வீட்டிற்கு சென்ற வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.