9 வயது மகள் கண் முன்னே மனைவி குத்திக்கொலை: குடும்பத் தகராறில் அரசு பள்ளி ஆசிரியர் வெறிச்செயல்

9 வயது மகள் கண் முன்னே மனைவி குத்திக்கொலை: குடும்பத் தகராறில் அரசு பள்ளி ஆசிரியர் வெறிச்செயல்

டெல்லியில் குடும்பத் தகராறில் 9 வயது மகள் கண் முன் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியரை போலீஸார் தேடி வருகின்றனர்.

டெல்லியின் நவாடா பகுதியில் அரசு பள்ளி உள்ளது. இதில் நவாடா கக்ரோலா பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 9 வயதில் மகள் இருந்தனர். ஆசிரியருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு அவர்கள் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், தனது 9 வயது மகள் முன்னிலையில், மனைவியை கத்தியால் சரமாரியாகக் குத்தினார். அவர் சரிந்து விழுவதைப் பார்த்து அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து பக்கத்து வீட்டினரிடம் 9 வயது சிறுமி தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து பார்த்த போது சிறுமியின் தாய், ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டுக் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலை குறித்து காவல் துறை துணை ஆணையர் (துவாரகா) எம் ஹர்ஷவர்தன் கூறுகையில், " தனது தாயைக் கத்தியால் அவரது தந்தைக் குத்திக் கொலை செய்தார் என்பதை போலீஸில் 9 வயது மகள் கூறியுள்ளார். இதுகுறித்து மோகன் கார்டன் காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலையாளியான ஆசிரியரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார்" என்றார். டெல்லியில் மனைவியை அரசு பள்ளி ஆசிரியர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in