‘அப்பா குடிப்பதை நிறுத்தினால் மட்டுமே என் ஆன்மா சாந்தி அடையும்’ -குடிகார தகப்பனைத் திருத்த தன்னுயிரை மாய்த்த மாணவி!

குடியைக் கெடுக்கும் குடி!
 மாணவி தற்கொலை
மாணவி தற்கொலை

தந்தையின் குடிப்பழக்கத்தினால் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சின்னராஜாகுப்பம் பகுதியை சேர்ந்தவர்பிரபு. கூலி தொழிலாளியான இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் பிளஸ் 2 முடித்துள்ள நிலையில், மகள் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்நிலையில் கூலி வேலைக்கு செல்லும் பிரபு தினமும் குடித்து விட்டு வருவதும், வீட்டில் குடும்பத்தாருடன் தகராறு செய்வதுமாக இருந்துள்ளார். ஒவ்வொரு நாள் இரவும் இதே நிலை நீடித்துள்ளது. இதனால் பிரபுவின் மகள் மனம் வெறுத்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

100 நாள் வேலைக்கு சென்று திரும்பிய தாய் கற்பகம், தனது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு துடித்து போனார். அக்கம்பக்ததார் துணையுடன் மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரது மகள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா போலீஸார் விசாரணையின் போது, பிரபுவின் மகள் எழுதிய கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர். அந்த கடிதத்தில், ’என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்தனும்; அதன் மூலம் என் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ, அப்பொழுதுதான் என் ஆன்மா சாந்தி அடையும். போயிட்டு வரேன்’ என உருக்கமாக எழுதியுள்ளார்.

10-ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவி தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in