
முதல் மனைவியைப் பிரிந்து, இரண்டாவது திருமணம் செய்த வாலிபர், முதல் மனைவியைப் பிரிந்த ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி சர்தார்புரத்தைச் சேர்ந்தவர் நயினார்(40) கட்டுமானத் தொழிலாளி. இவருக்கும் விஜயலெட்சுமி என்றப் பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் விஜயலெட்சுமிக்கும், நயினாருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் விஜயலெட்சுமி அதே தெருவில் தனியாக வீடு எடுத்து வசித்துவந்தார்.
இந்நிலையில் நயினார் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் நயினாருக்கும், இரண்டாவது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட நயினார், தன் முதல் மனைவியின் பெயரைச் சொல்லியும், கையில் அவர் புகைப்படத்தை வைத்துக்கொண்டும் பலரிடமும் இரண்டாவது திருமணத்தில் நிம்மதி பறிபோய்விட்டது என புலம்பி வந்தார். இந்நிலையில் இன்று காலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் நயினார். பேட்டை போலீஸார் அவரது உடலை மீட்டு, ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் மனைவியை புறந்தள்ளி, இரண்டாவது திருமணம் செய்தவர் முதல் மனைவியைப் பிரிந்த ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.