
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நாகை அருகே பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை ஒன்றாம் வகுப்பு மாணவி திறந்து வைத்தார்.
இந்தியா முழுவதும் தேசிய அறிவியல் தினம் பிப்.28-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 1928 பிப். 28-ம் தேதி சர்.சிவி ராமன் ஒளிச்சிதறலை கண்டுபிடித்தார். இது இராமன் விளைவு என்று அழைக்கப்பட்டது. இதற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930-ல் அவருக்கு வழங்கப்பட்டது. இத்தகைய சிறப்பு மிகுந்த ராமன் விளைவு கண்டுபிடித்த நாள் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. 1987-ம் ஆண்டு முதல் இருந்து இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மைய கருத்தோடு இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 'உலக அறிவியல் உலக நலம்' என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி நாகப்பட்டினம் அருகில் உள்ள ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
ஒன்றாம் வகுப்பு மாணவி யாழினி கண்காட்சியைத் திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில் ஒரத்தூர் பள்ளி மாணவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 40 அறிவியல் காட்சி பொருட்களைக் காட்சிப்படுத்தியிருந்தனர். அத்துடன் காட்சி பொருள்கள் குறித்து விளக்கமும் அளித்தனர்.
நாகை நம்பியார் நகர் சேர்ந்த சமூக ஆர்வலர் பொறியாளர் சுபாஷ் சந்திரபோஸ் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி பாராட்டினார். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் மக்கள் உள்ளிட்டோர் கண்காட்சியைக் காண வந்திருந்தனர். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் நித்யா கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்தார்.