நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்த முயன்றபோது கண் இமைக்கும் நொடியில் டியூப்லைட்டை உடைத்துவிட்டுத் தப்பியோட முயன்ற கைதியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் அப்பகுதியில் உள்ள திருவள்ளுவர் சாலையில் தன் பைக்கை நிறுத்திவிட்டு ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று இருந்தார். அவர் திரும்பிவந்து பார்த்தபோது பைக்கைக் காணவில்லை. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் சிசிடிவி கேமிராக்களின் அடிப்படையில் ஆய்வு செய்தனர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஜோதி மாரியப்பன் என்பவர் பைக்கைத் திருடியது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ஜோதி மாரியப்பனை சங்கரன்கோவில் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். அப்போது ஜோதி மாரியப்பன், நீதிமன்றத்தில் இருந்த ஒரு டியூப் லைட்டை உடைத்தார். அனைவரும் அதைக் கவனித்தபோது தப்பியோட முயன்றார். உடனே சுகாதரித்த போலீஸார், விரைந்து சென்று ஜோதி மாரியப்பனைப் பிடித்தனர். இச்சம்பவம் சங்கரன்கோவில் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.