உதவிக்குச் சென்ற காவலர் ரவுடி கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழப்பு: சென்னையில் சோகம்

உதவிக்குச் சென்ற காவலர் ரவுடி கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழப்பு: சென்னையில் சோகம்

சென்னையில் ரவுடிகள் கல்லால் தாக்கியதில் படுகாயமடைந்த காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை ஆலந்தூர் கண்ணன் காலனி் 5-வது தெருவை சேர்ந்தவர் விஜயன்(32). புதுப்பேட்டை ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 7-ம் தேதி இரவு தனது மைத்துனர் வாசுதேவன் என்பவருடன் பழவந்தாங்கல் மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வாசுதேவனை செல்போனில் தொடர்பு கொண்ட அவரது நண்பர் அஜ்மல் தன்னை ஆலந்தூர் கண்ணன் காலனி மைதானத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குவதாகவும் உடனே வருமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து இருவரும் சம்பவ இடத்திற்கு சென்று மதுபோதையில் இருந்த அந்த கும்பலை தட்டிக்கேட்டனர். அப்போது அந்த கும்பல் காவலர் விஜயன், வாசுதேவன் இருவரை கல்லால் தாக்கியதில் காவலர் விஜயன் நெற்றிப் பொட்டில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதில் காயமடைந்த விஜயன்

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இச்சம்பவம் குறித்து பரங்கிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து அஜித், வினோத், விவேக், ரவிகுமார் ஆகிய 4 பேரை நேற்றுமுன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் விஜயன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து பரங்கிமலை போலீஸார் இந்த வழக்கினை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in