2 மாதங்களாக சிக்காத கொலையாளிகள்: இரட்டைக்கொலை நடந்த வீடு அருகே சிக்கிய மர்மநபரால் பரபரப்பு

2 மாதங்களாக சிக்காத கொலையாளிகள்: இரட்டைக்கொலை நடந்த வீடு அருகே சிக்கிய மர்மநபரால் பரபரப்பு

அருப்புக்கோட்டையில் 2 மாதங்களுக்கு முன்பு இரட்டைக்கொலை நடந்த வழக்கில் இதுவரை யாரும் சிக்காத நிலையில், அந்த வீட்டின் அருகே உள்ள வீட்டுக்குள் புகுந்த மர்மநபரால் இன்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எம்டிஆர் நகர் வடக்கு 2-வது தெருவில் ஜூலை 18-ந் தேதி சங்கரபாண்டியன்- ஜோதிமணி என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் கொலை செய்யப்பட்டனர். கொலைக்கும்பல் 8 பவுன் நகையும் அப்போது திருடியது தெரிய வந்தது.

கொலையாளிகளைப் பிடிப்பதற்காக ஐஜி அஸ்ரா கார்க் மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரை கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இரட்டை கொலை நடந்த அதே தெருவில் அந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் சமையல் தொழியான சவுந்தரபாண்டியன் என்பவரின் வீட்டிற்குள் இன்று அதிகாலை மர்மநபர் நுழைய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுந்தரபாண்டியன் வீட்டின் முன்பிருந்த சுவரை ஏறி குதித்து உள்ளே இருந்த கதவைத் தட்டிய மர்ம நபர் , உள்ளே போலீஸ் இருப்பதாகவும், கதவை உடனடியாகத் திறக்கவும் என்று கூறியுள்ளார். ஆனால், கதவை யாரும் திறக்கவில்லை. இதனால் மாறி மாறி அந்த நபர் வேகமாக கதவைத் தட்டியுள்ளார்.

இதனால் சவுந்தரபாண்டியன் மகள் கதவைத் திறக்க முயன்ற போது எதிர் வீட்டில் வசிக்கும் நபர் இதைப்பார்த்து சந்தேகம் அடைந்து யார் என்று கேட்டுள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.அதற்குள் அங்கிருந்தவர்கள் மர்ம நபரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை டவுன் போலீஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்," நாங்கள் ஏற்கெனவே அச்சத்தில் உள்ளோம். இரட்டை கொலை நடந்த வீட்டின் அருகே மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடப்பது மேலும் அச்சுறுத்துவதாக உள்ளது. எனவே, இப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும்" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in