`நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்'; காவல்நிலையத்தில் சிறுவன்-சிறுமி ஆஜர்: போலீஸார் அதிர்ச்சி

 சிறுவன் கைது
சிறுவன் கைது `நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்'; காவல்நிலையத்தில் சிறுவன்-சிறுமி ஆஜர்: போலீஸார் அதிர்ச்சி

15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்ட 17 வயது சிறுவன் காவல் நிலையத்தில் ஆஜரானார். ஆனால் அந்த சிறுவனை போக்சோ வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர்.

இலங்கை போரின் போது அந்நாட்டில் இருந்து தப்பி வந்த தமிழர்களுக்கு தமிழகத்தில் ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் பகுதியில் இலங்கை வாழ் தமிழர்கள் அகதிகள் முகாம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த முகாமில் உள்ள 15 வயதான சிறுமி ஒருவரை ராமநாதபுரம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி உள்ள 17 வயதான சிறுவன் ஒருவன் காதலித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் இருந்த ஒரு சிறுவனை காணவில்லை என க்யூ பிரிவு போலீஸார் கொடுத்த தகவலின் அடிப்படையில், மண்டபம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், 17 வயது சிறுவனும், அந்த சிறுமியும் தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி காவல்நிலையத்தில் தாங்கள் திருமணம் செய்து கொண்டதாக கூறி ஆஜராகியுள்ளனர். அதை கேட்டு அதிர்ச்சடைந்த போலீஸார், இருவரது பெற்றோர்களையும் வரவழைத்து சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து சொக்கம்பட்டி போலீஸார், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் பேரில், விரைந்து வந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் 15 வயது சிறுமியை திருமணம் செய்த 17 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டனர்.

அதன் அடிப்படையில், இந்த சம்பவம் குறித்து சொக்கம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறி 17 வயது சிறுவன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in