பல ஆண்டுகளாக காதலித்து வந்த காதலி திடீரென மரணம் அடைந்ததால் காதலன் அவரது உடலுக்கு தாலி கட்டியதுடன், "இனிமேல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்" என்று சத்தியம் செய்துள்ளார். இந்த சம்பவம் அசாமில் நடந்துள்ளது.
அசாமை சேர்ந்தவர் பிதுமன் (27). இவர் பிரார்த்தனா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் சில ஆண்டுகளாக தொடர்ந்துள்ளது. இதனிடையே, இவர்களின் காதல் விவகாரம் இருவரின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத பெற்றோர்கள், திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, காதலி பிரார்த்தனாவுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இந்த தகவல் காதலன் பிதுமனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிதுமன், தாலி, மாலை, மஞ்சள் குங்குமத்துடன் காதலிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, காதலியை பார்த்து கதறி அழுதுள்ளார். பின்னர், தான் கொண்டு வந்த மாலையை காதலியின் கழுத்தில் போட்ட பிதுமன், தாலி கட்டி நெற்றியில் மஞ்சள் குங்குமத்தை வைத்தார். அப்போது, அங்கிருந்தவர்கள் அனைவரும் கண்கலங்கினர்.
இதனிடையே, தனது காதலியை என்னால் மறக்க முடியாது என்றும் இனி மேல் நான் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என்றும் காதலன் பிதுமன் சத்தியம் செய்திருப்பது காதலி வீட்டார் மற்றும் அங்கிருந்தவர்களை உருக வைத்துவிட்டது.