
திருமண நேரத்தில் மணமகளுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கேயே அவருக்கு திருமணம் நடைபெற்ற சம்பவம் தெலங்கானாவில் நடந்திருக்கிறது.
தெலங்கானா மாநிலம், மஞ்சேரியானா மாவட்டத்தைச் சேர்ந்த சைலஜா-திருப்பதி ஆகியோருக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர். இவர்களின் திருமணத்தை வீட்டிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் மணமகள் சைலஜாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சைலஜாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணமகள் சைலஜாவுக்கு அறுவை சிகிச்சையை டாக்டர்கள் செய்தனர்.
அதே நேரத்தில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்து வந்த நிலையில் மீண்டும் திருமண ஏற்பாடுகளை செய்ய மணமக்கள் வீட்டாருக்கு வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இருவீட்டாரும் சேர்ந்து மருத்துவமனையிலேயே திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி நிச்சயிக்கப்பட்ட திருமண நாளில் மருத்துவமனையில் சைலஜா-திருப்பதி ஜோடிக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்களே இந்த திருமணத்தில் பங்கேற்றதோடு, அங்கிருந்த செவிலியர்கள், டாக்டர்கள் மணமக்களை வாழ்த்தி பரிசு பொருட்களை வழங்கினர். மணமகள் படுத்திருந்த படுக்கையை மணமேடையாக கருதி மணமகன் தாலி கட்டிய நெகிழ்ச்சிச் சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.