முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென் வெப் தொடரில் திருநங்கையாக நடிக்கிறார். இது தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார்.
1994-ம் ஆண்டு உலக அழகிய பட்டம் வென்ற சுஷ்மிதாசென், தமிழில் ரட்சகன் படத்தில் நாகார்ஜுனா ஜோடியாக ரட்சகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை அடுத்து இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். 46 வயதாகும் சுஷ்மிதா சென் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
தற்போது வெப் தொடர்களில் சுஷ்மிதா சென் நடித்து வருகிறார். சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்கான குரல் கொடுக்கும் கவுரி சாவந்த் என்னும் திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும்' தாலி' என்னும் வெப் தொடரில் திருநங்கை கதாபாத்திரத்தில் சுஷ்மிதா சென் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தத் தொடரை தேசிய விருது பெற்ற ரவிஜாதவ் இயக்கியுள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் சுஷ்மிதாசென் பகிர்ந்துள்ளார். அதில், "இந்த அழகான நபரை சித்தரித்து அவரது கதையை உலகிற்கு கொண்டு வந்ததை விட வேறு எதுவும் என்னை பெருமையுடனும் நன்றியுடனும் இருக்க செய்யவில்லை. மேலும் வாழ்வதற்கும், கண்ணியத்துடன் வாழ்வதற்கும் அனைவருக்கும் உரிமை உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.