மீன் வாங்கச் சென்ற வியாபாரி மீது பால் வேன் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே மீன் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சீர்காழி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையன் மகன் சங்கர் (42). மீன் வியாபாரியான இவர் தினமும் அருகில் உள்ள பழையாறு மீன் பிடித் துறைமுகத்திற்கு சென்று மீன் வாங்கி வந்து மற்ற பகுதிகளில் வியாபாரம் செய்து வந்தார். அதன்படி இன்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் அரசூரில் இருந்து கிளம்பி புத்தூர் வழியாக பழையாறு மீன் பிடித்துறைமுகத்திற்கு மீன் வாங்குவதற்காக சென்று கொண்டு இருந்தார்.
அவர் தாண்டவன்குளம் என்ற இடத்திற்கருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த ஆவின் பால் வேன் மோதியதில் படுகாயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த புதுப்பட்டினம் போலீஸார் சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.