நெல்லையில் அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் கொள்ளையனாக மாறியுள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர் 500 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாநகரத்தில் சமீபத்தில் வழக்கறிஞர் ஒருவரது வீட்டில் 70 பவுன் கொள்ளை போனது. இந்தக்கொள்ளை சம்பவம் தொடர்பாக மாநகர காவல்துறை தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் அரசியல்கட்சியை சேர்ந்த நெல்லை மாவட்ட நிர்வாகி ஒருவருக்கு தொடர்பு இந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மாநகர காவல்துறையே அதிரும்வண்ணம் வரிசையாக தகவல்களை கூறினார். நீண்ட ஆண்டுகளாக அரசியல் பின்புலத்தில் இருந்து வரும் அவரிடமிருந்து 500 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தென்காசியிலும், கடையநல்லூர் பகுதிகளிலும் அந்த நபர் அதிகளவில் திருட்டு நகைகளை கொடுத்துள்ளதாகவும் அத்தனையும் மாநகர போலீஸார் மீட்க தென்காசி பகுதிக்கும், கடையநல்லூர் பகுதிக்கும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நெல்லையைச் சேர்ந்த அந்த அரசியல் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் பிடிப்பட்டவரின் கொள்ளை சம்பவங்களுக்கு பக்கபலமாக இருந்துள்ளார் எனவும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் நெல்லையை சேர்ந்த அந்த முக்கிய பிரமுகர் வீடு அருகேயுள்ள கரிசல்குளத்தில் பதுக்கி வைத்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ள தொடர்கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய அந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைதாகியுள்ள அரசியல்கட்சியின் கூட்டாளிகள் பலர் தற்பொழுது தலைமறைவாகி உள்ளனர். தொடர்ந்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கிய அரசியல் கட்சி பிரமுகர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.