மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அரசு மருத்துவமனை படுக்கையில் நாய் உறங்கும் காட்சி வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லமில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நோயாளிக்கான ஒரு இருக்கையில் நாய் ஒன்று நேற்று மாலை அயர்ந்து உறங்கியுள்ளது. இதை வீடியோவாக எடுத்த ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்து மத்தியப் பிரதேசத்தை ஆளும் பாஜகவை காங்கிரஸ் கடுமையாக கண்டித்துள்ளது. கவலைக்குரிய சுகாதார அமைப்பு என அது தனது கண்டத்தைப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவரான பிரபாகர் நானாவரே கூறுகையில்," விடுமுறையில் இருந்ததால் இந்த சம்பவம் குறித்து எனக்குத் தெரியாது" என்று பதிலளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா தனது ட்விட்டர் பக்கத்தில், " பாஜக ஆட்சியின் கீழ் மாநிலத்தில் நாய்கள் நன்றாக உறங்குகின்றன. அதே நேரத்தில் நோயாளிகள் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் அலைகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் அந்த வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.