பட்டியலின பணியிடங்களை நிரப்பாமல் காலியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்த தடை கோரி வழக்கு!

பட்டியலின பணியிடங்களை நிரப்பாமல் காலியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்த தடை கோரி வழக்கு!

தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான காலிப் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பாமல், காலியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தி, நிரப்ப தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மத்திய - மாநில அரசு பட்டியலின மற்றும் பழங்குடியின பணியாளர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கருப்பையா தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழகத்தில் பல்வேறு துறைகளில், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான 10 ஆயிரத்து 402 அரசுப் பணியிடங்கள், பின்னடைவு காலிப் பணியிடங்களாக உள்ளன என கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப பல்வேறு விதிகளை வகுத்து கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததாகக் கூறியுள்ளார்.

மாநிலம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 11 லட்சத்து 96 ஆயிரத்து 982 பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்கள் அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான பின்னடைவு காலி பணியிடங்களை, சிறப்பு தேர்வு நடத்தி நிரப்ப நடவடிக்கை எடுக்காத தமிழக அரசின் தேர்வு முகமைகள், ஏராளமான தேர்வுகளை நடத்தி காலியிடங்களை நிரப்பி வருவதாக தெரிவித்துள்ளார்.

அதனால் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களை சிறப்பு தேர்வு நடத்தி நிரப்பாமல், காலியிடங்களுக்கு தேர்வு நடத்தி நிரப்ப தடை விதிக்க வேண்டும் எனவும், பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணையை தள்ளிவைக்கும்படி மனுதாரர் வைத்த கோரிக்கையை ஏற்ற, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in