ஆபாசமாக பேசுதல், கொலைமிரட்டல் விடுத்ததாக சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரின் மகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விஜயலட்சுமி. இவரது மகன் ராக்கி ஸ்வாரிஸ்(33). இவர் சூளைமேடு சௌராஷ்ட்ரா நகரில் மிக்கி ஃபேஷன் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராக்கி ஸ்வாரிஸ் தனது சகோதரியும், காவல் ஆய்வாளர் விஜயலட்சுமியின் மகளுமான கேண்டி ஸ்வாரிஸ்(26) மீது சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் ஓன்றை அளித்தார். அதில் சகோதரி கேண்டி, தனது கடைக்குள் அத்துமீறி நுழைந்து கடையில் வேலை செய்த பணிப்பெண்ணை அநாகரிகமாக பேசி மிரட்டி கடை சாவியை எடுத்துச் சென்றதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அப்புகாரின் பேரில், சூளைமேடு போலீஸார் காவல் ஆய்வாளரின் மகள் கேண்டி ஸ்வாரிஸ் மீது ஆபாசமாக பேசுதல் மற்றும் கொலைமிரட்டல் விடுத்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, அவரது மகன் ராக்கி ஸ்வாரிஸ் மற்றும் அவரது மகள் கேண்டி ஸ்வாரிஸ் ஆகிய மூவருக்குள் சில ஆண்டுளாக பிரச்சினை இருந்து வருவதும், இதனால் மூவரும் மாறி மாறி ஒருவர் மேல் ஒருவர் காவல் நிலையங்களில் புகார் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.