
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே டிராக்டரில் அமர்ந்து சென்ற சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலுார் மாவட்டம், தளவாய் கூடலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி ரேகா, தங்கள் மகன் வரதராஜனுடன் (10) திட்டக்குடி அடுத்த பெருமுளையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். வரதராஜன், அதே பகுதியிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்தார்.
ரேகாவின் தம்பி மணிகண்டன், புதிதாக டிராக்டர் வாங்கியிருந்தார். நேற்று காலை தனபால் என்பவரின் வயலில் உழவு செய்வதற்காக டிராக்டர் எடுத்துச் சென்றனர். டிராக்டரை குழுமூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்றான். டிராக்டரின் ஒரு பக்கத்தில் மணிகண்டன் அமர்ந்து கொள்ள, சிறுவன் வரதராஜன் தானும் வருவதாக அடம்பிடித்து அவனும் ஏறி இன்னொரு பக்கத்தில் அமர்ந்து சென்றான்.
டிராக்டர் வயல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது வயலில் உள்ள ஒரு வரப்பில் ஏறி இறங்கியது. இதில் டிராக்டர் நிலை தடுமாறியது. அதனால் அதில் அமர்ந்திருந்த சிறுவன் வரதராஜன் தவறி கீழே விழுந்தான். அவனது தலையில் டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. அதனால் சம்பவ இடத்திலேயே வரதராஜன் உயிரிழந்தான்.
இது குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீஸார் வரதராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.