
திருநெல்வேலியில் 8-ம் வகுப்புப் படிக்கும் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் ஜெயஜோதி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். டெய்லரான இவர் கிருஷ்ணாபுரம் பகுதியில் டெய்லரிங் கடை நடத்தி வருகின்றார். இவரது மகள் ஸ்ரீரிக்ஷியா(14) இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். ஸ்ரீரிக்ஷியா நேற்று இரவு வழக்கம் போல் குடும்பத்துடன் சேர்ந்து உணவு அருந்தினார்.
தொடர்ந்து இரவு தன் அறைக்கு படுக்கச் சென்றார். ஆனால், காலையில் வெகுநேரமாகியும் ஸ்ரீரிக்ஷியா தன் அறைக்கதவைத் திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த மாரியப்பன் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அங்கே ஸ்ரீரிக்ஷியா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த தகவலின்பேரில் விரைந்து வந்த சிவந்திப்பட்டி போலீஸார் மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எட்டாம் வகுப்பு மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் நெல்லை பேட்டை பகுதியில் அக்கா செல்போன் தராததால் பள்ளியில் பயிலும் அவரது தம்பி தற்கொலை செய்த சம்பவம் அரங்கேறியது. இன்று காலையில் நெல்லை, டக்கரம்மாள்புரம் பகுதியில் உள்ள செவிலியர் கல்லூரி விடுதியில் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். நெல்லையில் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது சமூக ஆர்வலர்களைக் கவலைகொள்ளச் செய்துள்ளது.