
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 843 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் 14-ம் தேதி கொரோனா பாதிப்பு 402 ஆக இருந்தது. மார்ச் 16 -ம் தேதி அது 754 ஆக உயர்ந்தது. இந்நிலையில் நேற்று எண்ணிக்கை 796 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன்படி கடந்த 4 நாட்களில் தினசரி பாதிப்பு இருமடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி நிலவரப்படி பாதிப்பு 833 ஆக இருந்தது. அதன்பின்னர் 4 மாதங்கள் கழித்து தற்போது தினசரி பாதிப்பு மீண்டும் 800-ஐ தாண்டியுள்ளது.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக நேற்று 197 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கர்நாடகாவில் 127 பேர், குஜராத்தில் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 94 ஆயிரத்து 349 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 476 பேர் மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 58 ஆயிரத்து 161ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை நிலவரப்படி 5,389 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றைய தினத்தை விட 363 அதிகமாகும். கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தலா ஒருவர் நேற்று இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் இரண்டைக் கணக்கில் சேர்த்துள்ளனர். இதனால் கொரோனாவால் மொத்த பலி எண்ணிக்கை 5,30,799 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.