சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்: சோதனையில் ரயில்வே போலீஸ் அதிரடி!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்: சோதனையில் ரயில்வே போலீஸ் அதிரடி!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 75 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டு வந்த வடமாநில இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் நேற்று இரவு ரயில் நிலையத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என்பது தொடர்பான சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த ஹவுரா விரைவு ரயிலில் சந்தேகத்திற்கிடமாக வந்த நபர் ஒருவரை பிடித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் விசாரணை நடத்தி அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் இருந்த பாலீதின் கவரில் கட்டுக்கட்டாக 75 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.

மேலும் அவரிடம் பணத்திற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் 75 லட்ச ரூபாயை பறிமுதல் செய்த போலீஸார், அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணம் கொண்டு வந்த நபர் மேற்கு வங்கத்தை சேர்ந்த சோவிக் மண்டல்(24) என்பதும், நகை செய்யும் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் சென்னை மிண்ட் தெருவில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவதற்காக 75 லட்ச ரூபாய் பணம் கொண்டு வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் 75 லட்ச ரூபாயை வருமான வரித்துறையினரிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் ஒப்படைத்தனர்.

75 லட்ச ரூபாய் பணம் தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in