பிரதமர் நரேந்திர மோடியால் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கும் ரோஜ்கார் மேளா வேலைவாய்ப்பு விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதில் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு அனைத்து இடங்களிலும் ஒளிபரப்பப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 96 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மத்திய சமூகநீதித்துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி இளைஞர்களுக்கு பணி நியமண ஆணையினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேசுகையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். அதில் ஒரு பகுதியாக இந்த வேலைவாய்ப்பு விழாவின் மூலம் இந்தியாவில் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறார். இதற்கு முன்பு தொடங்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா, பி எல் ஐ திறன் வளர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்கள் இந்தியாவில் வேலை வாய்ப்பு உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. அந்த வகையில் இந்த திட்டமும் வேலை வாய்ப்பு வழங்குவதை ஊக்குவித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி இந்தியாவின் வளர்ச்சியில் பங்கு கொள்ள வைக்கும்.
கடந்தாண்டு அக். 22-ம் தேதி 75 ஆயிரம் பணி நியமன ஆணைகளை வழங்கி இந்நிகழ்ச்சியினை பாரத பிரதமர் துவக்கி வைத்தார். திட்டம் துவங்கி ஒரு வருடத்தில் 10 லட்சம் வேலை வாய்ப்பு வழங்குவது இலக்காக கொண்டுள்ளது. கடந்த ஆண்டு நவ. 22-ம் தேதி தேசத்தின் 45 பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1008-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு ஆணைகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் கர்மயோகி பரம்பு மாடியூல் என்கிற திட்டத்தை தொடங்கினார். இதன் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெரும்வகையில் இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று 71 ஆயிரம் நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை பாரத பிரதமர் வழங்குகிறார். கர்ம கர்மயோகி பரம்பு உயர்சியின் அனுபவங்கள் குறித்தும் இதில் பகிரப்பட்டுள்ளது.
ரயில்வே, உயர் கல்வி, மருத்துவம், தபால் துறை, வருவாய் துறை, உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு துறைகளில் வேலை வாய்ப்பு பணி நியமன ஆணைகளை இன்று பணியாற்ற இளைஞர்கள் பெற்றுள்ளனர். இந்தியா 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில் இளைஞர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக அளவில் வேலை வாய்ப்பு உருவாக்குவது தேசத்தின் பொருளாதாரத்தையும் அதிகரிக்கும்" என்றார்.