சென்னை பெரிய மேட்டில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான நீச்சல் குளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரிய மேடு நேரு ஸ்டேடியத்தை அடுத்து உள்ளது மைலேடி பூங்கா. மாநகராட்சிக்குச் சொந்தமான இந்த பூங்காவில் நீச்சல் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் காலை, மாலை என ஏராளமான சிறுவர்கள் வந்து நீச்சல் பயிற்சி பெற்று வருகின்றனர். சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பதற்காக இரண்டு பயிற்சியாளர்கள் மாநகராட்சியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ராகேஷ் குப்தா, தனது மகன் தேஜா குப்தாவை (7) நீச்சல் பயிற்சிக்காகச் சேர்த்துவிட்டுள்ளார். கடந்த இரண்டு வாரமாகச் சிறுவன் அவனுடைய தாத்தா மூலமாகத் தினமும் பூங்காவிற்கு வந்து நீச்சல் பயிற்சி பெற்று வந்திருக்கிறார். நேற்று மாலை வழக்கம் போல தன்னுடைய தாத்தாவுடன் நீச்சல் குளத்திற்கு வந்து நீச்சல் பயிற்சியில் தேஜா குப்தா ஈடுபட்டிருந்துள்ளார்.
திடீரென தேஜா குப்தா நீச்சல் குளத்தில் மாயமாகியுள்ளார். இதனையறிந்த பயிற்சியாளர் செந்தில் நீரில் மூழ்கிய தேஜா குப்தாவை மீட்டு முதலுதவி அளித்துள்ளார். சிறுவன் சுயநினைவின்றி இருந்ததால் உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறுவனின் தந்தை, பெரிய மேடு காவல் நிலையத்தில் பயிற்சியாளரின் கவனக்குறைவால் மகன் பலியானதாகப் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பயிற்சியாளர் செந்திலைக் கைது செய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.