நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் லாக்கரில் இருந்த நகைகள் மாயமானதாக அவர் அளித்துள்ள புகாரின் பேரில் ரஜினி மற்றும் தனுஷ் வீடுகளில் பணியாற்றிய சுமார் 60 பணியாளர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தப்படுகிறது.
தன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில். " கடந்த 2019-ம் ஆண்டு தங்கை சௌந்தர்யாவின் திருமணத்திற்கு பின்பு 60 சவரன் தங்க, வைர நகைகளை லாக்கரில் பூட்டி வைத்திருந்தேன்.
கடந்த 2021-ம் ஆண்டு வரை ஆழ்வார்பேட்டை செயின்ட்மேரிஸ் சாலையில் வசித்து வந்த வீட்டில் நகைகள் இருந்தன. பின்னர் முன்னாள் கணவர் தனுஷூடன் வசித்து வந்த சிஐடி நகரில் உள்ள வீட்டில் குடியேறியபோது அங்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து தற்போது போயஸ் கார்டனுக்கு குடியேறி வசித்து வருகிறேன். லாக்கர் மாறி மாறி 3 வீடுகளில் வைக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில் கடந்த மாதம் போயஸ் கார்டன் வீட்டின் லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் இருந்த தங்க, வைர, நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன், இதில் தங்கள் வீட்டுப் பணியாளர்கள் மீது சந்தேகம் உள்ளது " என்று அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதன் பேரில் தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரஜினி மற்றும் தனுஷ் வீடுகளில் பணி புரிந்த சுமார் அறுபது பேர் கொண்ட பட்டியலை தயார் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் ஒவ்வொருவராக தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.