கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி!

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி!

கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடியிலிருந்து பூண்டி மாதா கோயிலுக்கு ஆன்மிகப் பயணமாகப் பேருந்து மூலம் சுமார் 50 பேர் சென்றுள்ளனர். 03.10.2022 காலை கொள்ளிடம் ஆற்றில் இறங்கிக் குளித்திருக்கிறார்கள். அப்போது 6 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தீவிரமாகத் தேடினர். பல மணிநேரம் தேடுதலுக்குப் பின்பு தூத்துக்குடியைச் சேர்ந்த துரைராஜ் மகன்கள் சார்லஸ், பிரிதிவிராஜ் ஆகியோர் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து துரைராஜின் மற்றொரு மகனான தாவீதுராஜா அன்று மதியமே சடலமாக மீட்கப்பட்டார். அடுத்த சில மணி நேரத்தில் பிரவிராஜ் என்பவரும் சடலமாக மீட்கப்பட்டார். கெர்மஸ் என்பவர் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஈசாக் என்பவர் நேற்று மாலை மீட்கப்பட்டார்.

இந்நிலையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று முன்தினம்  (3.10.2022) காலை சுமார் 9 மணியளவில், ஆன்மீக சுற்றுலாவிற்காகத் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த சார்லஸ் (38), பிருத்விராஜ் (36), தாவீதுராஜா (30), பிரவீன்ராஜ் (19), ஈசாக் (19) மற்றும் அண்டோ கெர்மஸ் ரவி ஆகிய ஆறுபேரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் மூன்று லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in