காய்ச்சலுக்கு ஊசிபோட்ட 5 வயது சிறுவன் பலியான விவகாரம்: போலி செவிலியர் கைது

காய்ச்சலுக்கு ஊசிபோட்ட 5 வயது சிறுவன் பலியான விவகாரம்: போலி செவிலியர் கைது

ராஜபாளையத்தில் காய்ச்சலுக்கு ஊசிபோட்ட 5 வயது சிறுவன்உயிரிழந்த விவகாரத்தில் போலி செவிலியர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் உள்ள மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மனைவி கற்பகவள்ளி. இந்தத் தம்பதியினருக்கு பத்து வயதில் ஒரு மகளும், கவிதேவநாதன்(5) என்னும் மகனும் இருந்தனர். இதில் மகேஸ்வரனின் தாய் கற்பகவள்ளி திடீர் உடல்நலக்குறைவால் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உயிர் இழந்தார். இதனால் இரு குழந்தைகளையும் மகேஸ்வரனின் தாயார் தன் பொறுப்பில் வைத்து வளர்த்து வந்தார்.

இந்நிலையில் சிறுவன் கவிதேவநாதனுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த இருதினங்களுக்கு முன்பு, அவரது பாட்டி, சிறுவனை வீட்டு அருகில் உள்ள செவிலியர் ஒருவரிடம் அழைத்துப்போய் ஊசி போட்டுள்ளார். ஆனாலும் காய்ச்சல் விடவில்லை. இதனைத் தொடர்ந்து, சமந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவன் கவிதேவநாதனுக்கு மருத்துவர் பாஸ்கர் ஊசி போட்டார். வீட்டில் இருக்கும்போது சிறுவன் கவிதேவநாதன் திடீரென மயங்கி விழுந்தார். அவரது குடும்பத்தினர் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இவ்விவகாரம் குறித்து விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்திவந்தனர். அப்போது அவர்களுக்கு சிறுவனுக்கு முதன்முதலில் ஊசிபோட்ட செவிலியர் ஆக்னெஸ்ட் கேத்ரின்(35) மீது சந்தேகம் வந்தது. இதுகுறித்து சிவகாசி சுகாதார துணை இயக்குநர் சிவலிங்கம், ராஜபாளையம் நகர்நல அலுவலர் சரோஜா ஆகியோர் செவிலியர் ஆக்னெஸ்ட் கேத்ரினிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆக்னெஸ்ட் கேத்ரின் முறையாக செவிலியர் படிப்பே படிக்காதது தெரியவந்தது. ஒருவருடம் ஒரு மருத்துவமனையில் செவிலியராக இருந்தவர், அந்த அனுபவத்தைக்கொண்டே வீட்டில் மருந்து, மாத்திரைகள் வைத்து ஊசிபோட்டு வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் போலி செவிலியர் ஆக்னெஸ்ட் கேத்ரின் கைது செய்யப்பட்டார். இதேபோல் சிறுவனுக்கு ஊசிபோட்ட தனியார் மருத்துவமனையின் மருத்துவர் பாஸ்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவரான இவர், தனியாக இந்த கிளீனிக்கையும் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in