காய்ச்சலுக்கு ஊசி போட்ட டாக்டர்: மயங்கி விழுந்து 5 வயது சிறுவன் சாவு

காய்ச்சலுக்கு ஊசி போட்ட டாக்டர்: மயங்கி விழுந்து 5 வயது சிறுவன் சாவு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் காய்ச்சலுக்கு ஊசிபோட்ட 5 வயது சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையம் அருகில் உள்ள மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மனைவி கற்பகவள்ளி. இந்தத் தம்பதியினருக்கு பத்து வயதில் ஒரு மகளும், கவிதேவநாதன்(5) என்னும் மகனும் இருந்தனர். இதில் மகேஸ்வரனின் தாய் கற்பகவள்ளி திடீர் உடல்நலக்குறைவால் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உயிர் இழந்தார். இதனால் இரு குழந்தைகளையும் மகேஸ்வரனின் தாயார் தன் பொறுப்பில் வைத்து வளர்த்து வந்தார்.

இந்நிலையில் சிறுவன் கவிதேவநாதனுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த இருதினங்களுக்கு முன்பு, அவரது பாட்டி, சிறுவனை வீட்டு அருகில் உள்ள கம்பவுண்டர் ஒருவரிடம் அழைத்துப்போய் ஊசி போட்டுள்ளார். ஆனாலும் காய்ச்சல் விடவில்லை. இதனைத் தொடர்ந்து, சமந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவன் கவிதேவநாதனுக்கு மருத்துவர் ஊசி போட்டார். அந்த மருத்துவர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பணிசெய்பவர். இந்த மருத்துவமனையையும் அவரே சுயமாக நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஊசிபோட்டுவிட்டு வீட்டுக்கு வந்த சிறிதுநேரத்திலேயே சிறுவன் கவிதேவநாதன் மயங்கி விழுந்தார். அவரது குடும்பத்தினர் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சிறுவன் காய்ச்சலுக்கு போட்ட ஊசியால் உயிர் இழந்தாரா அல்லது சிறுவனின் உயிரைக் காய்ச்சல் பறித்ததா என்பது குறித்து ராஜபாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in