
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே இன்று நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பட்டாபாளையத்தை சேர்ந்த தங்கவேல் மகன் சந்திரன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவருக்கு திதி கொடுப்பதற்காக சந்திரனின் குடும்பத்தார் மற்றும் அவரது உறவினர்கள் ஒரு ஈச்சர் வேனில் நேற்று இரவு கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்றிருந்தனர். இன்று காலை திதி கொடுத்துவிட்டு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று வழிபட்டு விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
காங்கேயம் அருகே வாலிபனங்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் வேன் தலை குப்புறக் கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்த 30க்கும் மேற்பட்டவர்கள் வேனுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். இதனைக் கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக விரைந்து செயல்பட்டு வேனுக்கு அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனினும் இந்த விபத்தில் பட்டாபாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி (40), பூங்கொடி (37), சரோஜா (60), தமிழரசி(17), சுப்ரமணியன் (60) ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் அவர்கள் கோவை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.