புதுக்கோட்டையைக் கலக்கிய ஆடு திருடர்கள் கைது: 2 கார், 46 ஆடுகள் பறிமுதல்

புதுக்கோட்டையைக் கலக்கிய ஆடு திருடர்கள் கைது:  2 கார், 46 ஆடுகள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்  தொடர்ந்து ஆடுகளைத் திருடி வந்த ஐந்து பேர் ஆடுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் வளர்த்து வந்த ஆடுகள் தொடர்ந்து திருடு போனதாக மாவட்ட காவல்துறைக்கு புகார்கள் வந்தன. இதனால் போலீஸார் இரவு ரோந்துப் பணி மேற்கொண்டு குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி அறிவுறுத்தல் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் இரவு மற்றும் பகல் நேரங்களில் தீவிர சோதனைகளில் ஈடுபட்ட  வந்தனர். நேற்று இரவில் ரோந்துப் பணி மேற்கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் ஆடுகள் இருந்தது தெரிய வந்தது.  

காரில் இருந்தவர்களிடம்  போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில்  அவர்கள் அப்பகுதியில் தொடர்ந்து ஆடுகளை திருடி வருவது தெரியவந்தது. அதனையடுத்து  தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட முள்ளிக்காப்பட்டியை சேர்ந்த ஐயப்பன்(38), குமார்(35), ராமராசு(32) கல்லாக்கோட்டையைச்  சேர்ந்த முருகேசன்(45) கண்டினிவயலைச் சேர்ந்த ஜோதி(21) ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 46 ஆடுகள் மற்றும் இரண்டு கார் உள்ளிட்டவற்றையும் போலீஸார்  பறிமுதல் செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in