26 வேட்டை நாய்களுடன் பாரிவேட்டை; வனத்தில் 46 பேர் சிக்கினர்: அதிரடி காட்டிய வனத்துறையினர்!

26 வேட்டை நாய்களுடன் பாரிவேட்டை; வனத்தில் 46 பேர் சிக்கினர்: அதிரடி காட்டிய வனத்துறையினர்!

பழநி அருகே தொப்பம்பட்டி பகுதியில் பாரிவேட்டையில் ஈடுபட்டு முயல்களை வேட்டையாட முயன்ற கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநியை அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதியில் நேற்று மாலை வேட்டை நாய்களுடன் பலர் சுற்றித்திரிவதாக பழநி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பழநி வனச்சரக அலுவலர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் தொப்பம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நாற்பதுக்கும் மேற்பட்டோர் வேட்டை நாய்களுடன் சுற்றி வந்தது தெரியவந்தது.

அவர்களைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் அனைவரும் கரூர் மாவட்டம் தோகைமலையை அடுத்து உள்ள பாதிரிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு பாரிவேட்டையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.

தொடர்ந்து, அவர்களிடம் வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு ஒரு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் ஆண்டுதோறும் பாரிவேட்டையில் ஈடுபடுவதும், இந்த ஆண்டு பழநி பகுதியில் பாரிவேட்டையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. பாரிவேட்டையில் வேட்டையாடப்படும் முயல்களை திருச்சி மாவட்டத்தில் உள்ள வீரப்பூரில் உள்ள பொன்னர்-சங்கர் திருக்கோயிலில் வைத்து வழிபாடு நடத்தி இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, 46 பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்கள் வைத்திருந்த 26 வேட்டை நாய்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், பாரிவேட்டையில் ஈடுபடுவது சட்டப்படி தவறு என்றும், இனி வேட்டையாடக்கூடாது எனவும் எச்சரித்தனர். தொடர்ந்து, வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் விதித்த வனத்துறையினர் கைது செய்யப்பட்டவர்களை எச்சரித்து இன்று அனுப்பினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in