
மத்திய குற்றப்பிரிவில் இரு வழக்குகளில் 412 சவரன் தங்க நகைகள் மற்றும் 35 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.
பிரபல பிலிப்ஸ் நிறுவனத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அக்கௌண்டிங் ஸ்பெஷலிஸ்டாக பணியாற்றிய அகஸ்டின் சிரில் என்பவர் முறைகேடாக அலுவலக ஆப்பை பயன்படுத்தி 5 கோடி ரூபாய் கையாடல் செய்துள்ளார். இந்த மோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து அண்ணாநகரில் பகுதியில் பதுங்கி இருந்த அகஸ்டின் சிரில்(29) மற்றும் அவரது நண்பர் ராபின் கிறிஸ்டோபர் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 215 சவரன் தங்க நகைகள், 6 லட்சம் பணம், ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம், லேப்டாப், செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சென்னை திருவெற்றியூர் டோல்கேட்டில் ராஜேஷ் & பிரதர்ஸ் என்ற பெயரில் பருப்பு கம்பெனி நடத்தி வருபவர் ராஜேஷ். இவரது குடும்ப உறுப்பினர்களும் சொந்தமாக 4 நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது தலைமை அலுவலகத்தில் பணியாற்றிய சரண்யா, பிரதீபா, திவ்யா ஆகிய மூவரும் கடந்த 10 ஆண்டுகளாக கணக்கு வழக்குகளை பராமரித்து வந்தனர்.
வருட கடைசியில் ராஜேஷ் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தபோது 2.65 கோடி ரூபாயை இந்த மூன்று பெண்களும் கையாடல் செய்தது தெரியவந்தது. இது குறித்து ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து இந்த மோசடி தொடர்பாக தண்டையார்பேட்டை சேர்ந்த சரண்யா(32), பிரதீபா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 197 சவரன் தங்க நகைகள், 27.50 லட்சம் பணம், 3 செல்போன்கள் மற்றும் பல ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த இரு வழக்குகளில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்து மொத்தம் 412 சவரன் தங்க நகைகள், 35 லட்சம் பணம் மற்றும் ஒரு கார், இருசக்கர வாகனம், லேப்டாப் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். மேலும் வங்கிக்கணக்குகளில் இருந்த 67 லட்சம் பணம் முடக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பார்வையிட்டார். பின்னர் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மீனா, உதவி ஆணையர் ராஜசேகரன், காவல் ஆய்வாளர்கள் ரேவதி, சுமதி உட்பட 26 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து வெகுமதி சான்றிதழை வழங்கினார்.