வங்கிகளில் 4 ஆயிரம் கோடி மோசடி: சுரானா குழுமத்தின் 11.62 கோடி நகை, பணம் முடக்கம்

வங்கிகளில் 4 ஆயிரம் கோடி மோசடி: சுரானா குழுமத்தின் 11.62 கோடி நகை, பணம் முடக்கம்
Updated on
1 min read

வங்கிகளில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் சுரானா குழுமத்தின் 11.62 கோடி மதிப்பிலான நகை, விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் பணம் உள்ளிட்டவைகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சென்னையைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் 'சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட்' நிறுவனம், 'சுரானா பவர் லிமிடெட்' மற்றும் 'சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட்' ஆகியவை ஐடிபிஐ மற்றும் எஸ்பிஐ வங்கியிடமிருந்து 3986 கோடி ரூபாய் பணத்தைக் கடனாக பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் கடனாக 1301.76 கோடி ரூபாயை ஐடிபிஐ வங்கியில் இருந்தும், சுரானா பவர் லிமிடெட் 1495.76 கோடி ரூபாயை ஐடிபிஐ வங்கியில் இருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் 1,188.56 கோடி ரூபாய் எஸ்பிஐ வங்கியில் இருந்தும் கடன் பெற்று, அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக, அந்த நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த கடன் தொகையை வைத்து சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா மற்றும் நிறுவன ஊழியர்கள் ஆனந்த், பிரபாகரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் கடந்த ஜூலை 12-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஏற்கெனவே சுரானா குழும நிறுவனத்துக்குச் சொந்தமான 67 காற்றாலைகள் உட்பட 113.32 கோடி மதிப்புடைய 75 அசையா சொத்துக்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது கூடுதலாக சுரான குழும நிறுவனத்துக்கு தொடர்புடையவர்களின் 11.62 கோடி மதிப்பிலான நகை, விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் பணம் உள்ளிட்டவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in