பிரசவத்திற்காக மருத்துவமனையில் தாய் அனுமதி: பிஸ்கட் வாங்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!

பிரசவத்திற்காக மருத்துவமனையில் தாய் அனுமதி: பிஸ்கட் வாங்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!

தாய் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிஸ்கட் வாங்கச் சென்ற சிறுவன் மர்மமான முறையில் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை, அம்பத்தூர், காஞ்சனா குப்பம் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருடைய மனைவி நீலாம்பரி தற்போது மூன்றாவது முறையாகக் கர்ப்பமாகி இருந்தார். பிரசவத்துக்காக எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று மூத்த மகன் பிரின்ஸ் (4), பிஸ்கட் வாங்கக் கடைக்குச் சென்றுள்ளான். நீண்டநேரம் ஆகியும் பிரின்ஸ் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த புருஷோத்தமன், மகனைத் தேடிச்சென்றார். அப்போது மண்ணூர்பேட்டை, நேரு நகரில் உள்ள கிணற்றில் பிரின்ஸ் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த அம்பத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், கிணற்றில் மிதந்த பிரின்ஸ் உடலை மீட்டனர். மீட்கப்பட்ட உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அம்பத்தூர் எஸ்டேட் போலீஸார் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயரமான கிணற்றின் சுவரைத் தாண்டி குழந்தை கிணற்றுக்குள் தவறி விழுந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதால் குழந்தை இறப்பிற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in