15 மணி நேரத்தில் பறிபோன 4 உயிர்கள்: சென்னையில் ரயிலால் அதிகரிக்கும் மரணம்

15 மணி நேரத்தில் பறிபோன 4 உயிர்கள்: சென்னையில் ரயிலால் அதிகரிக்கும் மரணம்

சென்னையில் கடந்த 15 மணி நேரத்தில் 4 பேர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். ரயில்வே காவல்துறையினர் ரோந்து பணியை சரிவர செய்யாததே இது போன்ற உயிரிழப்புக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சட்ட விதிகளை மீறி ரயில் தண்டவாளங்களை கடந்து சென்றால் 6 மாதம் சிறைத் தண்டனை என போலீஸார் எச்சரித்தும் பொதுமக்கள் அதனை பொருட்படுத்தாமல் கடந்து செல்வதால் ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில்

சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள ரங்கராஜபுரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில் மோதி 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தலை சிதறி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே போல் எண்ணூர் அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வட மாநில வாலிபர் மீது விரைவு ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை தண்டவாளத்தில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க இருவர் மீது மற்றொரு ரயில் மோதியதில் இருவ உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இவ்விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த வாலிபர்கள் ஒருவர் வட மாநிலத்தவர் என்பதும் மற்ற இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையில் கடந்த 15 மணி நேரத்தில் மட்டும் நான்கு பேர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.

ஏற்கெனவே ரயில் தண்டவாளங்களில் சட்டத்துக்கு புறம்பாக விபத்துகள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் சென்னை ரயில்வே கோட்டம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக ஓடும் ரயிலில் ஏறுவது, இறங்குவது, சட்டத்துக்கு புறம்பாக ரயில் தண்டவாளங்களை கடப்பது ஆகியவற்றை மேற்கொண்டால், ரயில்வே சட்டம், பிரிவு 147-ன் படி 6 மாத சிறைத் தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே போலீஸார் எச்சரித்து வருகின்றனர். ஆனால்

பொதுமக்கள் சட்டத்துக்கு புறம்பாக ரயில் தண்டவாளத்தை கடந்து வருவதால் ரயிலில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சட்டத்தை மீறி தண்டவாளங்களை கடந்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற உயிரிழப்புகள் தடுக்கமுடியும் என்றும், ரயில்வே காவல்துறையினர் ரோந்து பணியை சரிவர செய்யாததே இது போன்ற உயிரிழப்புக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in