ஊர் சுற்றியதால் கண்டித்த ஆசிரியர்: தற்கொலை செய்ய எலி பேஸ்ட் சாப்பிட்ட 4 பள்ளி மாணவிகளால் பரபரப்பு

ஊர் சுற்றியதால் கண்டித்த ஆசிரியர்: தற்கொலை செய்ய எலி பேஸ்ட் சாப்பிட்ட 4 பள்ளி மாணவிகளால் பரபரப்பு

ஆசிரியர் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவிகள் 4 பேர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புதுப்பாளையத்தி்ல் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கியிருந்த நான்கு மாணவிகள் விடுமுறை தினத்தையொட்டி கடந்த 4 நாட்களாகச் சொந்த ஊருக்குச் செல்வதாக விடுதியில் தெரிவித்து விட்டு நண்பர்களின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். மேலும் அங்கிருந்து கோயிலுக்குச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மாணவிகளைக் காணவில்லை என அவர்களின் பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மாணவிகள் பள்ளிக்கு வந்த நிலையில் அவர்களை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவிகள் விடுதியில் வைத்திருந்த எலி பேஸ்ட்டைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதையடுத்து சிகிச்சைக்காக அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் ஆகியோர் மாணவிகளை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினர். இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம், ”மாணவிகள் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். தற்போது இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் பள்ளி மாணவிகளுக்குத் தற்கொலை எண்ணம் வராத வகையில் உரிய ஆலோசனைகள் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in