
உலகில் மிகவும் காற்று மாசடைந்த 50 நகரங்களில் இந்தியாவில் 39 உள்ளதாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஐக்யூ ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஐக்யூ ஏர் என்ற நிறுவனம் உலகின் மிகவும் காற்று மாசுடைந்த நகரங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக 132 நாடுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாராத கண்காணிப்பு அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 7,300 நகரங்களின் காற்றின் தரவுகளின் முடிவுகளை இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, உலகின் மாசுடைந்த 10 நகரங்களின் நாடுகளின் பட்டியலை வரிசைப்படுத்தியுள்ளது. உலகில் மிகவும் மாசுடைந்த நாடுகளில் இந்தியா தற்போது 8-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 5-வது இடத்தில் இந்தியா இருந்து குறிப்பிடத்தக்கது. மேலும் உலகில் மிகவும் மாசடைந்த 50 நகரங்களில் 39 இந்தியாவில் உள்ளன என்று அந்த ஆய்வு அறிக்கை கூறியுள்ளது.
இதில், முதல் 10 இடங்களுக்குள் 6 இந்திய நகரங்களும், முதல் 20 இடங்களில் 14 நகரங்களும், முதல் 50 இடங்களுக்குள் 39 நகரங்களும், முதல் 100 இடங்களுக்குள் 65 நகரங்களும் உள்ளன, இது முந்தைய ஆண்டில் 61 ஆக இருந்தது. முதல் இரண்டு இடங்களில் பாகிஸ்தானின் லாகூர், சீனாவின் ஹோடான் நகரங்களும், தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பிவாடி, டெல்லி ஆகிய நகரங்களும் உள்ளன.
உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 50 நகரங்களில் டெல்லி 4-வது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கொல்கத்தா அதிக மாசுபட்ட நகரமாக உள்ளது. இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பான அளவை விட 5 மடங்கு மாசுபாடு கொண்ட சென்னை தூய்மையானதாகக் கூறப்பட்டுள்ளது.
பெருநகரங்களான ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் 2017-ம் ஆண்டிலிருந்து சராசரியை விட மாசு அளவு அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நொய்டா, காசியாபாத், குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் உள்ளிட்ட என்சிஆர் பிராந்தியங்களில் மாசு அளவு குறைந்துள்ளது. உலகின் மிகவும் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் சாட், இரண்டாவது இடத்தில் ஈராக், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான், அவற்றைத் தொடர்ந்து பக்ரைன், வங்கதேசம், பர்கினா பாசோ, குவைத், இந்தியா, எகிப்து மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவை இடம் பெற்றுள்ளன.