
சிம்பாக்ஸ் மோசடியில் ஈடுபட்ட கல்லூரி் மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி நடுவான்கரை பகுதியில் சட்டவிரோதமாக தொலைத்தொடர்பு நிலையம் செயல்பட்டு வருவதாக மத்திய தொலைத்தொடர்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், தொலைத்தொடர்பு அதிகாரிகள், மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர். இதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு சிம்பாக்ஸ்கள் அமைக்கப்பட்டு வெளிநாட்டு அழைப்புகளை, உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது.
அப்போது, ஆதம்பாக்கத்தை சேர்ந்த முகமது நசீர் என்பவர் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டதும், கல்லூரி மாணவர்கள் அப்துல் மாலிக், சுப்பரமணி ஆகிய இருவரும் ரூட்டர்களை இயக்கியதும் தெரியவந்தது. இதனால் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து நான்கு சிம்பாக்ஸ், 250 மேற்பட்ட சிம்கார்டுகள் , ரூட்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.