
பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா மற்றும் போதை ஏற்படுத்தியக்கூடிய மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனைக்காக வைத்திருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருள்களுக்கு எதிராக போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று பெரியநாயக்கன் பாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, மத்தம்பாளையம் பகுதியில் போதைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த கோவர்தனன் (23 ), பிட்டு பிரவீன் (எ) பிரவீன்குமார் (21) மற்றும் நவீன்குமார் (21) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 200 கிராம் கஞ்சா, 208 போதை ஏற்படுத்தக்கூடிய மாத்திரைகள் மற்றும் 4 சிரஞ்சுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருட்கள் விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981 81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081 00100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.