
தருமபுரி அருகே விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்துள்ள பரிதாப சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே காளிகவுண்டன்கொட்டாய் என்ற கிராமத்தில் முருகேசன் என்ற விவசாயி தனது விவசாய நிலத்தில் பாதுகாப்புக்காக மின்வேலி அமைத்திருந்தார். நேற்று இரவு மூன்று யானைகள் தங்கள் குட்டிகளுடன் அந்த வழியாக மேய்ச்சலுக்காக வந்திருக்கின்றன. மின் வேலி இருப்பதை அறியாமல் முன்னே சென்ற 3 பெரிய யானைகள் மூன்றும் அதில் சிக்கி மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து உயிரிழந்தன. குட்டிகள் இரண்டும் சற்று பின்னே வந்ததால் அவை இரண்டும் உயிர் தப்பின.
தாய் யானை இறந்ததை அறியாமல் அந்த யானைகளை இரண்டு குட்டிகளும் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பது அங்குள்ள விவசாயிகளுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்துள்ள வனத்துறையினர் விவசாயி முருகேசனிடம் அனுமதி இன்றி மின்சார வேலி அமைத்திருந்ததற்காக விசாரணை செய்து வருகின்றனர்.