`அந்த வீடியோவை வெளியிட்டதால் தாக்கினோம்'- கைதான கல்லூரி மாணவர்கள் வாக்குமூலம்

`அந்த வீடியோவை வெளியிட்டதால் தாக்கினோம்'- கைதான கல்லூரி மாணவர்கள் வாக்குமூலம்

ராயபுரம் ரயில் நிலையத்தில் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயில் நேற்று மாலை ராயபுரம் ரயில் நிலையத்திற்கு வந்த போது ரயிலில் இருந்த 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் திடீரென கட்டை மற்றும் கற்களால், ரயில் நிலையத்தில் நின்றிருந்த மற்றொரு தரப்பு கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த சக பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் ராயபுரம் ரயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

கல்லூரி மாணவர்கள் கற்கள், கட்டையால் மாறி மாறி தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் ரயில்வே போலீஸார் ரயிலை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மாநில கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து வீடியோ காட்சிகளை வைத்து மாநில கல்லூரி மாணவர்களான ஸ்ரீகாந்த்(19), விஜய் சந்தோஷ்(19) மற்றும் ஒரு சிறுவனை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த வாரம் கும்மிடிபூண்டி ரூட்டை சேர்ந்த மாநில கல்லூரி மாணவர்கள் கொருக்குப்பேட்டையில் ரயில் நடைமேடையில் கத்தியை தேய்த்தபடியே சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து மூன்று மாணவர்களை கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வீடியோவை அரக்கோணம் ரூட் மாணவர்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக கூறி, நேற்று ராயபுரம் ரயில் நிலையத்தில் நின்றிருந்த அரக்கோணம் ரூட் மாணவர்கள் மீது கற்கள் மற்றும் கட்டையால் தாக்குதல் நடத்தியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். இதில் விஜய் சந்தோஷ் என்ற மாணவர் கத்தியை தேய்த்தபடியே சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மூன்று மாணவர்களை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in