பேக்கரியில் சான்ட்விச் சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆற்காடு அருகே கோட்டைமேட்டு பகுதியை சேர்ந்தவர் சாலமன். இவர் தனது குடும்பத்தினருடன் ராணிப்பேட்டைக்குச் சொந்த வேலை காரணமாக சென்றுள்ளார். அப்போது பஜாரில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்துள்ளார். அவருடன் வந்த சைமன்(10) ஜான்சன்(9), ரூபன்(7) ஆகிய மூவரும் பேக்கரியில் சான்ட்விச் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அங்கிருந்து வீட்டிற்குச் சென்ற பிறகு சிறுவர்களுக்கு வாந்தி மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர் உணவு ஒவ்வாமை காரணமாகவே மூவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் காவலர்கள் உதவியோடு ராணிப்பேட்டையில் உள்ள அந்த பேக்கரியில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது நிறத்தைக் கூட்டப் பயன்படுத்தப்படும் ரசாயனம், சமையல் சோடா, அஜினமோட்டோ உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து பேக்கரியில் வைத்திருந்த சான்ட்விச் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மாதிரிகளையும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்காக எடுத்துச் சென்றனர். மேலும் தற்காலிகமாக அந்த பேக்கரியை பூட்டிச் சென்றுள்ளார்கள்.