வாதங்களை நிறைவு செய்ய காலவரையறை வையுங்கள்! 2ஜி வழக்கை மீண்டும் ஒத்திவைத்த நீதிபதி

வாதங்களை நிறைவு செய்ய காலவரையறை வையுங்கள்! 2ஜி வழக்கை மீண்டும் ஒத்திவைத்த நீதிபதி

டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு விசாரணை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

அனைவரையும் விடுதலை செய்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்களை நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்து வரும் நிலையில், வழக்கின் விசாரணை கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வாதங்களை முன்வைக்க சி.பி.ஐ.க்கும், எதிர் மனுதாரர்களுக்கும் எத்தனை நாட்கள் வேண்டும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சி.பி.ஐ. தரப்பில் 6 நாட்களும், எதிர்மனுதாரர்கள் சார்பில் 25 நாட்களும் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை விரைவில் நிறைவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும், வாதங்களை நிறைவு செய்ய வேண்டிய காலவரையறையை அனைத்து வழக்கறிஞர்களும் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து, விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in