2 ஆண்டுகளுக்குப் பின் ஒரே இடத்தில் 24 கோயில்களின் கருடசேவை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாடு!

24 கருட சேவை
24 கருட சேவை

தஞ்சாவூரில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஒரே இடத்தில் நடைபெற்ற 24 கருட சேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பக்தர்கள் வெள்ளத்தில் பெருமாள் உற்சவர்கள்
பக்தர்கள் வெள்ளத்தில் பெருமாள் உற்சவர்கள்

தஞ்சாவூர் பகுதியில் மொத்தம் 24 பெருமாள் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் உள்ள உற்சவர்கள் ஆண்டுதோறும் வைகாசி திருவோண நட்சத்திரத்தில், கருட வாகனத்தில் ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படி வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோயிலில் 88-வது ஆண்டு கருட சேவை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கருட சேவையை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு தஞ்சாவூர் நீலமேகப்பெருமாள் கோயில், மணிகுன்றாப் பெருமாள் கோயில், மேல சிங்கப்பெருமாள் கோயில், வேளூர் வரதராஜர் கோயில், கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில், கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், வரதராஜபெருமாள் கோயில், நவநீதகிருஷ்ணன் கோயில், மேலவாசல் ரெங்கநாதர் கோயில், விஜய ராமர் கோயில், கோவிந்தராஜ பெருமாள் கோயில், ஜனார்த்தன பெருமாள் கோயில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், கீழ கோதண்டராமர் கோயில், கீழ சிங்கபெருமாள்கோயில், பூலோக கிருஷ்ணர் கோயில், படித்துறை வெங்கடேசப்பெருமாள் கோயில், பஜார் ராமர் கோயில் உள்ளிட்ட 24 கோயில்களிலிருந்து கருடவாகனத்தில் பெருமாள் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு, வரிசையாக கொடிமரத்து மூலை, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக பொதுமக்களுக்கு அருள்பாலித்தனர்.

அப்போது பக்தர்கள் பெருமாளுக்கு தேங்காய், பழம் வழங்கி அர்ச்சனை செய்து வழிபட்டனர். 24 பெருமாள் சுவாமியையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்ய வெளியூர் மற்றும் உள்ளூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் நான்கு ராஜ வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

படங்கள்: ஆர்.வெங்கடேஷ்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in