மதுரை, நாக்பூர், புவனேஷ்வர் உள்பட நாடு முழுவதும் முழுமையாகவும் பகுதியாகவும் இயங்கிவரும் 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளின் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை, நாக்பூர், புவனேஷ்வர், ஜோத்பூர், போபால் உள்பட பல பகுதிகளில் முழுமையாகவும் பகுதியாகவும் இயங்கிவரும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் எய்ம்ஸ் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள எய்ம்ஸ் 23 மருத்துவமனைகளுக்கு பெயர் சூட்டுவதற்கான ஆலோசனையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பெயர் சூட்டுவதற்காக, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று மறைக்கப்பட்ட தியாகிகள், உள்ளூர் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்கள் ஆகிய பிரிவுகள் ஒவ்வொன்றிலும் நான்கு பெயர்கள் பரிந்துரைக்கலாம் என்றும், அந்த பெயர் வைப்பதற்கான காரணங்களையும் விளக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனைகளில் சிலவற்றில் மாணவர் சேர்க்கை நடைபெற்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாநில அரசு கல்லூரிகளில் தற்காலிகமாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.