நடுக்கடலில் 30 மணி நேர தேடுதல்: கடத்தல் கும்பல் வீசிய 21.50 கிலோ தங்கக்கட்டிகள் கண்டுபிடிப்பு

 தங்கக்கட்டி
தங்கக்கட்டி நடுக்கடலில் 30 மணி நேர தேடுதல்; 21.50 கிலோ தங்கக்கட்டிகள் கண்டுபிடிப்பு

மன்னார் வளைகுடா கடலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீசிய மூடையில் இருந்து 21.5 கிலோ தங்கக்கட்டி கண்டெடுக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திற்கு மன்னர் வளைகுடா கடல் வழியாக தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படையினர் மண்டபம் தென் கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பைபர் படகு மண்டபம் தென் கடலில் வந்தது. அப்படகை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முயன்றனர். அப்போது படகில் இருந்தவர்கள் படகில் இருந்து ஒரு மூடையை கடலில் எறிந்தனர். இதையடுத்து அப்படகை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.

படகிலிருந்த 3 பேரிடம் விசாரித்தனர். விசாரணையில் வேதாளையை சேர்ந்த ஒருவருக்கு இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் கடத்தி வந்ததாகவும், ரோந்து படகை கண்டதும், தங்கக்கட்டி மூடையை கடலில் வீசியதும் தெரிந்தது. கடலில் வீசிய மூடையை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படை வீரர்கள் நேற்று அதிகாலை முதல் தேடினர்.

இந்தநிலையில் 30 மணி நேர தேடுதலுக்கு பின் தென் கடலில் ஒரு மூடை கண்டெடுக்கப்பட்டது. அதில் தலா1.50 கிலோ வீதம் 21.50 தங்கக்கட்டிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு 10 கோடி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. படகில் வந்தவர்கள் மேலும் சில மூடைகளை வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதல் பணியை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in