கன்னியாகுமரி மாவட்டத்தில், திருமணம் முடிந்த புதுமணத் தம்பதிக்கு பொங்கல் படி கொண்டு சென்றபோது கார் கவிழ்ந்தது. இதில் இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குமரிமாவட்டம், பூதப்பாண்டியைச் சேர்ந்த சிலர் பொங்கல் சீர்வரிசை கொடுக்க வேனில் காக்கமூர் என்னும் கிராமத்தை நோக்கி சென்றனர். இடக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் காரை ஓட்டினார். காரானது தாழக்குடி, அடுத்த சீதப்பால் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது நிலைத்தடுமாறி சாலையோரப் பள்ளத்தில் வயல், தோப்புகளுக்கு இடையில் சரிந்து விழுந்தது.
இதில் காரில் இருந்த பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த உலகம்மாள்(65), உமா(50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் காரில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்துகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் சீர்வரிசை கொடுக்க சென்ற வேன், விபத்தில் சிக்கி இருபெண்கள் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.