பின்னலாடை நகரம் எனப்படும் திருப்பூரில் அனுமதியும், உரிய ஆவணங்களும் இன்றி தங்கியிருந்த இரு நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூரில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. பனியன் வர்த்தம் தொடர்பாக திருப்பூரில் நைஜீரிய நாட்டினர் பலரும் தங்கியிருந்து தங்கள் நாட்டிற்கு ஆடைகளை அனுப்பி வருகின்றனர். இப்படி வரும் நைஜீரியர்களில் சிலர் தங்களுடைய விசா காலம் முடித்தும்கூட சட்ட முரணாக திருப்பூரில் தங்கியுள்ளனர். இவர்கள் அவ்வப்போது காவல்துறையினரால் கைதும் செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் காவல்துறையினர் ராயபுரம் பகுதியில் தங்கியிருந்த நைஜீரியர்களின் ஆவணங்களை ஆய்வுசெய்தனர். கொங்குநகர் உதவி ஆணையர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின் போது, சின்னான்நகர் பகுதியில் தங்கியிருந்த இரு நைஜீரியர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இவர்களுக்கான விசா முடிந்தும், அவர்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பாமல் இங்கேயே இருந்துவந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, நைஜீரிய நாட்டில் டேம்சூ பகுதியைச் சேர்ந்த பிரவுன்வூ(46), ஒலிசாக்பூ சுக்ஸ் டேவிட்(47) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.